மருதமுனையில்,அரச காணிகளை ஆக்கிரமித்தோரை வெளியேறுமாறு கட்டளை


மருதமுனையில் அரச காணிகளை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து குடியேறியவர்களை வெளியேறுமாறு நீதிமன்றம் இன்று உத்தரவு

(ஏ.எல்.எம்.ஷினாஸ்)

மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியின் பின்புறமாக உள்ள நவியான் குளப்பகுதியில் கமநல சேவைகள் திணைக்களத்தின் பராமரிப்பின் கீழ் உள்ள அரச காணிகளில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை அந்தக் காணிகளிலிருந்து உடனடியாக வெளியேறுமாறு இன்று (29) கல்முனை நீதவான் நீதிமன்றத்தால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த அரச காணிகளில் பலவந்தமாக குடியேறியவர்களை வெளியேற்றுமாறு கோரி கல்முனை நீதிமன்றத்தில் கமநல சேவைகள் திணைக்களத்தினால் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. திணைக்களத்தின் சார்பில் சட்டத்தரணி அலியார் றஸ்மின் அரச காணிக்கான நியாயபூர்வமா ஆதாரங்களை முன்வைத்தார்.

இன்னிலையில் வழக்கை ஆராய்ந்த நீதிமன்றம் தனியாருக்கு உரித்தான காணி என்பதற்கான எதுவித நியாயபூர்வமான ஆவணங்களும் இல்லாத நிலையில், இந்த அரச காணிகளில் பலவந்தமாக குடியேறியவர்களை உடனடியாக வெளியேறுமாறு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஐ.எல்.என்.றிஸ்வான் இன்று (29.05.2020) உத்தரவிட்டார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு குறித்த காணிகளை சிலர் பலவந்தமாக பிடித்துள்ளமையை கண்டித்து ஆர்பாட்டம் ஒன்றும் நடாத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.