அம்பாரை மாவட்டத்தில் மாலை 2 மணி வரை 41% வீத வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன


tp.Rfph;jFkhh; 
      

  9ஆவது பொதுத்தேர்தலுக்கான வாக்களிப்பு அம்பாரை மாவட்டத்திலும் இன்று காலை 7 முதல் ஆரம்பமாகி அமைதியான முறையில் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் மாலை 2 மணி வரை 41 % வாக்களிப்பே நடைபெற்றுள்ளது.

இதேநேரம் கடந்த கால தேர்தல்களோடு ஒப்பிடுகையில் வழமைக்கு மாறாக காலை முதல் வாக்காளர்கள் வாக்களிப்பில் அதிக ஆர்வம் காட்டி வருவதை அவதானிக்க முடிகின்றது.

வாக்களிப்பு நிலையங்களில் பாதுகாப்பான சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. இதனை சுகாதார துறையினரும் பார்வையிட்டு வருகின்றனர். இதனால் வாக்களிப்பதில் தாமதங்களும் ஏற்பட்டுள்ளன.

கல்முனை மற்றும் சாய்ந்தமருது பிரதேசங்களில் சிறிய சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக தேர்தல் கண்காணிப்பு பணியில் ஈடுபடும் கபே அமைப்பு தெரிவித்துள்ளது.

அம்பாரை மாவட்டத்தில் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் டி.எம்;.எல்.பண்டாரநாயக்கவின் பணிப்புரையில் தேர்தல் நடவடிக்கை சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு  வருகின்றன.

இதேநேரம் அம்பாரை மாவட்டத்தில் முன்னொருபோதும் இல்லாதவாறு பொதுத்தேர்தல் களம் சூடு பிடித்திருந்த நிலையில் அம்பாரை மாவட்டத்தில் தற்போது அமைதியான சூழ்நிலை காணப்படுகின்றது.
 
நான்கு தேர்தல் தொகுதியை உள்ளடக்கிய திகாமடுல்ல தேர்தல் மாவட்டமாக அமைந்துள்ள அம்பாரை மாவட்டத்தில் 2019ஆம் ஆண்டின் சனத்தொகை புள்ளிவிபர கணக்கெடுப்பின்படி இம்முறை 513979 வாக்களர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

இதில் அம்பாரை தொகுதியிலிருந்து 177144 வாக்களர்களும்
பொத்துவில் தொகுதியிலிருந்து 168793 வாக்களர்களும்
சம்மாந்துறை தொகுதியிலிருந்து 90405 வாக்களர்களும்
கல்முனை தொகுதியிலிருந்து 77637 வாக்களர்களும்
பதிவு செய்யப்பட்டு வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

மாவட்டத்திலிருந்து மொத்தமாக 7 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ள நிலையில்  ஒருபோதும் இல்லாதவாறு தேர்தல் களத்தில் 20 பதிவு செய்யப்பட்ட கட்சிகளும் 34 சுயேற்சை குழுக்களுமாக 540 வேட்பாளர்கள் களத்தில் குதித்துள்ளமை இங்கு சுட்டிக்காட்ட முடிகின்றது.

இதேநேரம் வாக்களிப்பதற்காக 525 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் 2000 பொலிசார் பாதுகாப்பு கடமையிலும் 6400 அரச உத்தியோகத்தர்கள் தேர்தல் கடமையிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் டி.எம்;.எல்.பண்டாரநாயக்க ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டிருந்தார்.  

இதற்கமைவாக பாதுகாப்பு தரப்பினர் தங்களது பணிகளை பக்கசார்புகளின்றி சிறப்பாக முன்னெடுத்து வருவதையும் அவதானிக்க முடிகின்றது.

இந்நிலையில் பெப்ரல் மற்றும் கபே உள்ளிட்ட தேர்தல் கண்காணிப்பாளர்களும் கடமையில் ஈடுபட்டுள்ள நிலையில் வாக்களிக்கின்ற மக்களின் சுகாதார மேம்பாடுகருதி சுகாதார நடைமுறைகளும் வாக்களிப்பு நிலையங்களில் பின்பற்றப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.