நாவிதன்வெளியில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்


 


பாறுக் ஷிஹான்




எமது போராட்டமானது ஏனைய இனத்திற்கு எதிரானது அல்ல எனவும் சகல மக்களும் ஒற்றுமையுடன் எதிர்காலத்தில்  பயணிக்க முன்வர வேண்டும்  என  அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன்  தெரிவித்தார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு  அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி இலங்கை  தமிழரசுக் கட்சியின்  ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் 5 ஆம்  நாளினை நினைவுகூறும் முகமாக  முள்ளிவாய்க்கால் கஞ்சியை  நினைவுகூறும் நிகழ்வொன்று  நாவிதன்வெளி பகுதியில்  திங்கட்கிழமை(16)  இடம்பெற்ற வேளை மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் தனது கருத்தில் குறிப்பிட்டதாவது

தமிழினம் பல அடக்கு முறைகளுக்கு உட்பட்டு  பல இன்னல்களை சந்தித்த ஒரு இனமாகும்.அத்துடன் பல ஜனநாயக ரீதியாக பல போராட்டத்தை நாம் முன்னெடுத்த போதிலும் தீர்வு கிடைக்காத பட்சத்தில் ஆயுத ரீதியிலான போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.இந்த ஆயுத ரீதியான போராட்டமும் எந்த இனத்திற்கும் எதிராக முன்னெடுக்கவில்லை.எமது இனத்தை பாதுகாப்பதற்காகவே ஆயுத போராட்டமானது முன்னெடுக்கப்பட்டது.எமது போராட்டமானது ஏனைய இனத்திற்கு எதிரானது அல்ல எனவும் சகல மக்களும் ஒற்றுமையுடன் எதிர்காலத்தில்  பயணிக்க முன்வர வேண்டும்  என்றார்.

மேலும் இந்நிகழ்வில்  அம்பாறை மாவட்ட  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான கவிந்திரன் கோடீஸ்வரன், மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்   பா.அரியநேந்திரன் ,  கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான  பொன் செல்வநாயகம் , சிவலிங்கம் ,நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர்களான சி.குணரெத்ணம் ,மு.நிரோஜன், யோ.தர்சன் ,நா.தர்சினி ,சமூக சேவகர் சமூக சேவகர்  தாமோதரம் பிரதீபன் ,மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக்கட்சியின்  மகளீர் அணி தலைவி என்.தேவமணி  ,ஆலையடிவேம்பு தமிழரசுக்கட்சியின் தலைவர் ஜெகநாதன்,உள்ளிட்ட  முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டதுடன்   முள்ளிவாய்க்கால் கஞ்சி  காய்ச்சப்பட்டு வீதியால் சென்ற மக்களுக்கு வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.